சீவக சிந்தாமணியில் வரும் பல்லவ தேசம் எது??!!
களப்பிர்ர் ஆட்சிக் காலத்தில் கிபி 250 முதல் கிபி 575 வரையில் பல தமிழ் இலக்கிய நூல்கள் உண்டாயின என்பதற்கு முழு விவரங்கள் கிடைக்கவில்லை. இருந்தபோதிலும், சமண முனிவரான “திருத்தக்க தேவர்” அவர்கள் நரி விருத்தம் மற்றும் சீவக சிந்தாமணியை இயற்றினார். சோழ அரசர் குலத்தில் பிறந்தவரான திருத்தக்க தேவர் சமணசமயத்துத் துறவியாகிக் சமண சமயத்துத் தேவகணத்தைச் சேர்ந்தார். இவர் “சீவகன்” என்னும் அரசனுடைய வரலாற்றை “சீவக சிந்தாமணி” என்னும் பெயரினால் பட எண்ணித் தம்முடைய சமய குருவின் அனுமதியைக் கோரினார். சீவகன் சரிதையில் சிற்றின்பச் செய்திகளும் அதிகமாக இருப்பதால் அதை எழுத முன்வந்த திருத்தக்கதேவர் தம்முடைய துறவு நிலையால் உறுதியுள்ளவராக இருக்கிறாரா என்பதை அறிய விரும்பின் குரு, இவரை முதலில் நிலையாமையைப் பற்றி ஒரு நூல் எழுதிக் காட்டும்படி கட்டளையிட்டார். அவர் கட்டளையை மேற்கொண்டுஎழுதப்பட்டதுதான் “நரி விருத்தம்”.
நரி விரித்தத்தை படித்த ஆசிரியர் திருத்தக்கத் தேவரின் உறுதியான துறவு நிலையை யறிந்து, சீவக சிந்தாமணிக் காவியத்தை இயற்றுவதற்கு அனுமதி கொடுத்தார். ஆகவே, நரி விருத்தம் சீவக சிந்தாமணிக்கு முன்னோடுயாகச் செய்யப்பட்ட நூல் என்பது தெரிகிறது. நூறு செய்யுட்களைக் கொண்ட நரி விருத்தம் இப்பொழுதும் இருக்கிறது.
சீவக சிந்தாமணி:-
சீவக சிந்தாமணி என்றும் மணநூல் என்றும் பெயர் பெற்று விளங்குகிறது. சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரக் காவியத்துக்கு அடுத்தபடி, சிறந்த காவியமாகப் போற்றப்படுகிறது. புதிய விருத்த யாப்பினால் இயற்றப்பட்ட முதல்காவியம் இது.
சீவக சிந்தாமணியின் தலைவனான சீவக்குமாரன் வர்த்தமான மகாவீர்ரின் காலத்தில் இருந்தவன். மகாவிர்ர் நிருவாண மோட்சம் அடைந்து இப்பொழுது 2500 ஆண்டுகள் ஆகின்றன. எனவே, சீவகனும் அந்தக் காலத்தில் இருந்தவன் ஆவான்.
இவ்விடத்தில் ஒரு செய்தியை விளக்கிக் கூற வேண்டும். சீவக குமாரன், பல்லவ தேசத்தின் மகளை மணஞ் செய்தான் என்று கூறப்படுகிறான். பல்லவ தேசம் என்பது எது என்பதை அறிய வேண்டும். பல்லவ மன்னர் தமிழ்நாட்டுத் தொண்டை மண்டலத்தைக் கிபி 6ஆம் நூற்றாண்டு முதல் சிறப்பாக அரசாண்டதை வரலாற்றினால் அறிகிறோம்.
கிமு 6 நூற்றாண்டிலிருந்த சீவகன் கிபி 6ஆம் நூற்றாண்டில் இருந்த பல்லவ அரசன் மகளை மணஞ்செய்யஇயலுமா??!!
“படுமழை பருவம் பொய்யா பல்லவ தேயம் என்னும், தடமலர்க் குவளை பட்டந் தழுவிய யாணர் நன்னாடு” (1185)
“கோங்கு பூத்து திர்ந்த குன்றிற் பொன்னணி புளகம் வேய்ந்த, பாங்கமை பரும யானைப் பல்லவ தேச மன்னன்” (2253)
“பாகத்தைப் படாத நெஞ்சிற் பல்லவ தேயமன்னன், சேவகன் சிங்கநாதன் செருக்களம் குறுகினானே” (2278)
என்றும் பல்லவ தேசமும் பல்லவ தேயமன்னனும் சீவக சிந்தாமணியில் கூறப்படுகின்றனர். இங்கு கூறப்பட்ட பல்லவதேசம் தமிழ்நாட்டில் பல்லவதேசம் அல்ல. சீவகன் வாழ்ந்த காலத்தில் தமிழ்நாட்டில் பல்லவதேசமும் பல்லவ அரசரும் இருந்தில்லர். இதில் கூறப்படுகிற பல்லவ தேசம் இப்போது “ஈரான்” என்று பெயர் கூறப்பட்டுகிற பழைய பாரசீகதேசமாகும். பழைய பாரசீக தேசத்தை ஆண்டவர் “பஃலவர்” என்றும் அந்த நாடு பஃவல நாடு என்றும் கூறப்படுகிறது. பஃலவர் தேசம் என்றது தமிழில் பல்லவ தேசம் என்றாயிற்று. சீவக சிந்தாமணி கூறுகிற பல்லவ தேசம் பழைய பாரசிக நாடாகிய பஃலவ தேசம் ஆகும்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:
Post a Comment